புலிகள் இயக்க துணைத் தலைவர் பால்ராஜ் மரணம்
இதுகுறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
பால்ராஜுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 21, 22, 23 ஆகிய 3 நாட்களும் தேசிய துக்க நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலசேகரன் கந்தையாவை, புலிகள் இயக்கத்தினர் பிரிகேடியர் பால்ராஜ் என்றுதான் அழைப்பார்கள். புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் பால்ராஜும் ஒருவர்.
1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சார்லஸ் ஆன்டனி படைப்பிரிவின் முதலாவது தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார்.
1993 ஆம் ஆண்டு வரையும் மற்றும் 1995-1997 ஆம் ஆண்டு கால கட்டத்திலும் இப்பொறுப்பை அவர் வகித்து வந்தார்.
2000மாவது ஆண்டு நடந்த ஆனையிறவு போரில் முக்கியப் பங்காற்றியுள்ளார் பால்ராஜ்.
அவருக்கு கடந்த 2003ம் ஆண்டு இருதயக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஆண்டில் அவருக்கு சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சமீப காலமாக அவருக்கு இருதயக் கோளாறு மோசமடைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் 3 முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் புலிகள் இயக்கத்தின் சண்டைகளில் தீவிரமாக பங்கேற்று வந்தார். மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த கடும் சண்டைகளில் பால்ராஜும் ஈடுபட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் பல்வேறு தாக்குதல் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாலசேகரன் கந்தையா போர் யுக்திகளில் கைதேர்ந்தவராக விளங்கினார். புலிகள் இயக்கத்தின் இயக்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
பிரபாகரன் அஞ்சலி:
பால்ராஜின் உடலுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புலிகள் இயக்க முக்கியத் தலைவர்கள், பல்வேறு படைப்பிரிவு தளபதிகள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.













Click it and Unblock the Notifications