மத்திய பணிக்குப் போக 'டேப்' உபாத்யாயா திட்டம்?
சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கி தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரான, கூடுதல் டிஜிபி உபாத்யாயா மீண்டும் மத்திய அரசுப் பணிக்கே செல்லும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராக இருந்த உபாத்யாயாவுடன், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி பேசிய பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அவை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி சண்முகம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந் நிலையில் உபாத்யாயாவுடன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றக் கோரி பேசிய விவகாரமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த இரு டேப்களுமே உபாத்யாயாவின் அலுவலகத்திலிருந்தே லீக் ஆனது தெரியவந்தது.
இந்த நிலையில்தான் உபாத்யாயா லஞ்ச ஒழிப்புப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்குப் பணி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மீண்டும் மத்தியப் பணிக்கே திரும்பி விடலாமா என்ற யோசனையில் உபாத்யாயா இருப்பதாக கூறப்படுகிறது.
எந்த வகையான பாலிட்டிக்ஸுக்குள்ளும் சிக்காமல் இருந்து விட்ட உபாத்யாயா, தன் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு விசாரணை வரை தன்னை இழுத்து விட்டதால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். பேசாமல் மறுபடியும் மத்திய பணிக்கே போய் விடலாமா என்ற யோசனையில் அவர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது
ஏற்கனவே மத்திய உளவுப் பிரிவில் இருந்தவர்தான் உபாத்யாயா. அப்போது முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க உத்தரவிடப்பட்டபோது அவற்றை செய்துள்ளார். மேலும், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்துள்ளார்.
அதே பழக்கத்தில்தான், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பணியாற்றிய போதும் தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்துள்ளார். ஆனால் அதுவே இப்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் லஞ்ச ஒழிப்பைச் சேர்ந்த உபாத்யாயா ஒட்டுக் கேட்டது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.