கணவருடன் சென்ற பெண்ணிடம் அட்டூழியம் - 3 ரவுடிகள் கைது
சென்னை: கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சாப்ட்வேர் என்ஜீனியரை துரத்தி துரத்தி சில்மிஷம் செய்த 3 ரவுடிகளை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஷாலினி. இவர் திங்கள்கிழமை இரவு தனது கணவர் சத்யனுடன் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன), பெரம்பூரிலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இரவு எட்டரை மணியளவில் அவர்கள் சேத்துப்பட்டு பாலம் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. அதில் இருந்த காந்தி என்கிற நபர், ஷாலினியின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாலினி, பைக்கை வேகாக ஓட்டுமாறு சத்யனிடம் கூறினார். அவரும் பைக்கை வேகமாக ஓட்டினார்.
ஆனால் அந்தக் கும்பல் தங்களது பைக்குகளில் துரத்தி வந்தனர். பாலத்தின் மத்தியில் வந்து வழிமறித்து நிறுத்தி ஷாலினியின் கன்னத்திலும், இடுப்பிலும் மாறி மாறிக் கிள்ளினர்.
இதனால் ஷாலினி அலறினார். சத்யன், அந்தக் கும்பலை எதிர்த்து மோதிப் பார்த்தார். ஆனால் அவர்கள் சத்யனை சரமாரியாக அடித்தனர். தங்களுடன் ஷாலினியை அனுப்பி வைக்குமாறு மிரட்டினர். இந்த சமயத்தில், பாலத்தில் வாகனங்கள் சில வந்ததைப் பார்த்ததும் அந்தக் கும்பல் ஓடி விட்டது.
அதிர்ச்சியிலிருந்து மீண்ட இருவரும் உடனடியாக சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கிருந்த போலீஸாரிடம் 3 பேரும் வந்த பைக்குகளின் எண்களைக் கொடுத்து புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் துரிதமாக செயலில் இறங்கி அனைத்துக் காவல் நிலையங்களையும் உஷார்படுத்தினர். இரவு முழுவதும் போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அந்தக் கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
அவர்களில் காந்தி என்பவர் மிகப் பெரிய ரவுடி ஆவார். கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் ஒருமுறை சிறைவாசம் அனுபவித்தவர். அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் இவர்.
மற்ற இருவரில், வசீகரன் அயனாவரத்தைச் சேர்ந்தவர். வேலு சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். இவர்களும் கூட ரவுடிகள்தான். இவர்கள் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.
3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications