விஜயன் கொலை: ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு நார்கோ சோதனை!
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ள லதா, அவரது கணவர் ராஜேந்திரன் மற்றும் மகன் குமார் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் (நார்கோ அனாலிசிஸ்) சோதனை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி கோட்டூர்புரம் பாலம் அருகே படுகொலை செய்யப்பட்டார் விஜயன். சொத்துப் பிரச்சினை காரணமாக தனது சகோதரி லதா மற்றும் குடும்பத்தினர்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என சுதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், போலீஸாரின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள ராஜேந்திரனுக்கும், அவரது மகன் குமாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் விசாரணையைத் தொடர முடியாத நிலையில் போலீஸார் உள்ளனர்.
இதுவரை அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீஸாருக்கு தேவையான தகவல்கள், போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. எனவே அவர்களை பெங்களூர் அழைத்துச் சென்று உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் முறைப்படி அனுமதி பெறவும் போலீஸார் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications