கோவை பஸ் கண்டக்டருக்கு சுற்றுச்சூழல் விருது
கோவை: கோவையைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டருக்கு இந்த ஆண்டுக்கான 'எக்கோ வாரியர்' என்ற சுற்றுச் சூழலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இயற்கையின்பால் அதிக ஆர்வம் கொண்டவரான கண்டக்டர் யோகநாதன் (40) கடந்த 1980லிருந்து மரங்கள் நட்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் இன்று வரை 50,000க்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவ, மாணவியரிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், சிறு துளி மற்றும் வனத்துறையிடம் மரக்கன்றுகளை வாங்கி நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவருக்கு லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல அமைப்புகள் விருது வழங்கியுள்ளன. இந் நிலையில் இப்போது துணை ஜனாதிபதியிடமிருந்தும் விருது பெற்றுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு, சுற்றுச்சூழலுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் போராளி (எக்கோ வாரியர்) என்ற விருதை வழங்கி வருகிறது.
உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த 5ம் தேதியன்று துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி யோகநாதனுக்கு இந்த விருதை வழங்கினார்.












Click it and Unblock the Notifications