பள்ளிகள் அருகே செல்போன் டவர் அமைக்க தடை

இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது 19 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் நிலையும் உள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு செல்போன் கோபுரங்களை அமைத்து வருகின்றனர். இதனால் பல மாநகரங்கள் செல்போன் கோபுரங்களின் ஆக்கிரமிப்பால் திணறி வருகின்றன.
செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய தொலைத்தொடர்பு துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிக் கூடங்களுக்குஅருகிலும், பள்ளிக் கட்டடங்களிலும் செல்போன் கோபுரங்களை அமைக்க தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்கவும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டுமனால் முதலில் அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும், செல்போன் கோபுரங்கள் இடம் பெறும் கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து 3 மீட்டர் உயரத்தில்தான் கோபுரங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications