அரசு ஊழியர்களின் நிலம் 'ஸ்வாஹா': தலைமைச் செயலக அதிகாரி, தம்பி கைது
சென்னை: அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை விற்று ரூ. 10 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக தலைமைச் செயலக அதிகாரியும், அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், பதுவஞ்சேரியில் வசிப்பவர் வி.ராமகிருஷ்ணன். இவர், தலைமைச் செயலக அதிகாரிகள் குடியிருப்பு நல சங்கத்தின் தலைவராக உள்ளார். சென்னை தலைமை செயலகத்திலும் அதிகாரியாக பணிபுரிகிறார்.
இவர், தமிழக அரசின் உள்துறை செயலாளர் மாலதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்காக வீட்டு மனைகள் வழங்கும் திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், தாம்பரத்தை அடுத்த பதுவஞ்சேரி கிராமத்தில் 8.96 ஹெக்டேர் நிலத்தை அரசு வழங்கியது.
இந்த நிலம் தலைமை செயலக தட்டச்சர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு வழங்காமல் அப்போது தலைமை செயலக தட்டச்சர் சங்கத்தின் தலைவராக இருந்த சுந்தர் என்பவர் பினாமி பெயரில் வீட்டு மனைகளை வெளி நபர்களுக்கு விற்பனை செய்து ரூ.10 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மொத்தம் 51 பிளாட்டுகளை விற்பனை செய்துள்ளார். தற்போது அந்த பகுதியில் ஒரு பிளாட்டின் விலை ரூ.20 லட்சம் விலை போகிறது.
தலைமைச் செயலக தட்டச்சர் சங்க உறுப்பினர்களுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தை சுந்தர் முறைகேடு செய்து விற்பனை செய்துள்ளார். இதற்கு அவரது தம்பி ஜோதிபாசுவும் (வயது 39) உடந்தை. இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை மாநகர காவல்துறை ஆணையரின் விசாரணைக்கு உள்துறைச் செயலாளர் மாலதி அனுப்பி வைத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையர் சேகர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
துணை ஆணையர் விஜயக்குமாரி தலைமையில் விசாரணை தொடங்கியது. புகாருக்கு ஆளான சுந்தர் சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறையில் உதவி செக்ஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இவரும் பதுவஞ்சேரி கிராமத்தில் தான் வசிக்கிறார். இவரது தம்பி ஜோதிபாசுவும் அங்குதான் வாழ்கிறார். சுந்தரின் மனைவியும் தலைமை செயலகத்தில் உதவி செக்ஷன் அதிகாரியாக உள்ளார்.
போலீஸாரின் தீவிர விசாரணைக்குப் பின்னர் சுந்தரும், ஜோதிபாசுவும் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீஸார் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications