ஜி-8 மாநாட்டில் 9ம் தேதி புஷ்ஷுடன் மன்மோகன் சந்திப்பு

ஜப்பானில் ஜூலை 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை ஜி-8 எனப்படும் வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு ஜப்பானின் ஹொக்கைடோவில் நடைபெறுகிறது. ஜி-8 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த மாநாட்டில் இந்தியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் கலந்து கொள்கின்றன.
பிரதமர் மன்மோகன் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 7ம் தேதி டோக்கியோ புறப்பட்டுச் செல்கிறார். இந்த பயணத்தால் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த நடைமுறைகள் பலப்படும், மேம்பாட்டை அடையும் என வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ். மேனன் தெரிவித்துள்ளார்.
9ம் தேதி அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப் பேசுகிறார். அப்போது அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.
பிரதமரின் பயணம் குறித்து மேனன் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், அணு பொருள் விநியோக (என்.எஸ்.ஜி) கூட்டமைப்பில் ஜி-8 நாடுகள் உள்பட 45 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், இந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவின் அணு பொருள் தேவையை (யுரேனியம்) பூர்த்தி செய்யும். ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக சர்வதேச அணு சக்தி கவுன்சிலுடன், இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஒரு ஒப்பந்தத்ைத நாம் செய்ய வேண்டியுள்ளது.
பிரதமரின் பயணத்தின்போது யுரேனியம் பெறுவது தொடர்பாக ஜி- 8 நாடுகளுடனும், மாநாட்டில் கலந்து கொள்ளும் பிற நாடுகளுடனும் இந்தியா பேச்சு நடத்தும். அதேசமயம், நமக்கு பிற நாடுகளிடமிருந்து யுரேனியத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுக் கொண்டுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தத்ைத நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால் ஒப்பந்தம் நிறைவேறுவது உறுதி. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அதை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம் என்றார் மேனன்.
ஜப்பான் செல்லும் பிரதமருடன், மேனன், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரதமரின் சிறப்பு தூதர் ஷியாம் சரண் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
புஷ் தவிர சீன அதிபர் ஹூ ஜின்டாவோ, ஆஸ்திரேலிய பிரதமர், ரஷ்ய, ஜப்பான் தலைவர்கள் உள்ளிட்டோரையும் பிரதமர் சந்தித்துப் பேசவுள்ளார். யுரேனியம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமருடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.
ஜி-8 மாநாட்டின் முக்கிய அஜென்டாவாக உலகப் பொருளாதாரம், உணவு பாதுகாப்பு, எரிபொருள் நெருக்கடி, தட்பவெப்ப மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின்போது இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யாவுடன் தனியாக ஒரு சந்திப்பையும் ஜி-8 உறுப்பு நாடுகள் மேற்கொள்ளவுள்ளன.
--












Click it and Unblock the Notifications