இடதுசாரிகள் கடிதத்திற்கு பிரதமர் பதிலளிக்க மாட்டார்?
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசின் நிலையை விளக்கக் கூறி இடதுசாரிகள் அனுப்பியுள்ள கடிதத்திற்கு பிரதமரோ, மத்திய அரசோ கடிதம் அனுப்ப மாட்டார்கள் என்று தெரிகிறது.
ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் செல்வதற்கு முன்பு அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசின் நிலையை விளக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கோரியுள்ளனர். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இடதுசாரிகள் விதித்துள்ள கெடுவின்படி, இந்தக் கடிதத்திற்கு பிரதமரிடமிருந்து இன்னும் 24 மணி நேரத்திற்குள் பதில் வந்தாக வேண்டும்.
ஆனால் பிரதமரிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ இடதுசாரிகளுக்கு பதில் வராது என்றே தோன்றுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ராஜ்கன்ச் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என்ன ஆனாலும் ஒப்பந்தம் நிறைவேறும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும். அதில் எந்த மாற்றமும், தயக்கமும் இல்லை.
இதற்காக என்ன விளைவு ஏற்பட்டாலும் அதை சந்திக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸும் தயாராக உள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும். நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வராது.அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார் முன்ஷி.
முன்ஷியின் பேச்சைப் பார்க்கும்போது சமாஜ்வாடி கொடுத்துள்ள ஊக்கத்தால், இடதுசாரிகளை உதறி விட மத்திய அரசு தீர்மானித்து விட்டதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications