சோம்நாத் பதவி விலக நெருக்கடி முற்றுகிறது - இன்று முடிவு
டெல்லி: சோம்நாத் சாட்டர்ஜி லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பலமுனைகளிலிருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதையடுத்து மூத்த தலைவர் ஜோதிபாசுவை இன்று சந்தித்து அவர் இறுதி முடிவெடுக்கவுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோம்நாத். சம்பிரதாயப்படி, சபாநாயகர் பதவியை ஏற்பதற்கு முன்பாக அக்கட்சியிலிருந்து விலகினார்.
தற்போது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டுள்ளனர். எனவே சோம்நாத்தும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அரசியல் கட்சி சார்பில் நான்சபாநாயகர் தேர்தலில் போட்டியிடவில்லை, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவன். என்னை அரசியல் பிரச்சினைகளில் இழுக்க வேண்டும். ராஜினாமா செய்யும் முடிவு எதுவும் இல்லை என்று சோம்நாத் விளக்கம் கொடுத்தார்.
இருப்பினும் சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து நெருக்குதல் வருகிறதாம். குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் சோம்நாத் விலக வேண்டும் என சில காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கி வருகிறார்களாம்.
இதனால் குழப்பமடைந்துள்ள சோம்நாத் சாட்டர்ஜி, இன்று கொல்கத்தாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
நான் விலகவா, வேண்டாமா என ஜோதிபாசுவிடம் கேட்கவுள்ளார். விலகுங்கள் என்று ஜோதிபாசு அறிவுரை கூறினால் நாளையே தனது பதவியை ராஜினாமா செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக வேண்டும் என அவருக்கு நெருக்கடி எதுவும் தரப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், இல்லை, சோம்நாத்துக்கு எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. அவர் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.
--












Click it and Unblock the Notifications