ராஜ் தாக்கரே கட்சி மீண்டும் வன்முறை - அரசு அலுவலகம் சூறை
புனே: மகாராஷ்டிராவில் சில காலமாக அமைதியாக இருந்து வந்த ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சியினர் மீண்டும் வன்முறையில் இறங்கியுள்ளனர். புனேவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை தாக்கி சூறையாடினர்.
சில மாதங்களுக்கு முன்பு ராஜ் தாக்கரேவின் கட்சியினர் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக பெரும் வன்முறையில் இறங்கினர். இந்த விவகாரத்தில் பின்னர் ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து சற்று அடங்கிய இந்த விவகாரம் தற்போது மீண்டும் வெடித்துள்ளது. புனேவில் நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
அந்த அலுவலக அதிகாரிகள் சிலர், உள்ளூர் இளைஞர்களை அவமதித்து விட்டதாக கூறி உள்ளே புகுந்த ராஜ் தாக்கரே கட்சியினர் கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கினர். கதவு, ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அலுவலகத்ைத சூறையாடி முடித்த பின்னர் அந்தக் கும்பல்அங்கிருந்து சென்றது.
மீண்டும் மகாராஷ்டிராவில் வெடித்துள்ள வன்முறையால் வட மாநிலத்தவர்கள் உள்ளிட்டோர் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
மீண்டும் ராஜ் தாக்கரே உருமல்:
இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல,வட மாநிலத்தவர்களை மகாராஷ்டிராவை விட்டு அனுப்பினால்தான் மகாராஷ்டிரா உருப்பட முடியும் என ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மகாராஷ்டிராவிலிருந்து குறிப்பாக மும்பையிலிருந்து வட மாநிலத்தவர்களை விரட்ட வேண்டும். பீகார், உ.பி. மாநிலத்துக்காரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் மகாராஷ்டிரா உருப்படும். வளர முடியும்.
ஆங்கில வழிப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் மராத்தி கட்டாயம் போதிக்கப்பட வேண்டும். கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் மராத்தியில் எழுதப்பட்ட பெயர் பலகைகளைத்தான் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
தாக்கரேவின் பேச்சு மற்றும் புனே சம்பவத்தால் மீண்டும் மும்பையில் கலவரம் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications