பதவி விலக சோம்நாத் மறுப்பு-கட்சியைவிட்டு விலகுவதாக எச்சரிக்கை
தன்னை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பு முடிந்தபின் கட்சியை விட்டே விலகிவிடுவேன் என்றும் கட்சித் தலைவர்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன.
ஆதரவை வாபஸ் பெற்றது தொடர்பாக ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் வழங்கிய 59 எம்பிக்கள் பட்டியலில் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதனால் அவரும் அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால், தனது பெயரை பட்டியலில் சேர்த்ததை சோம்நாத் கடுமையாக எதிர்த்து வருவதோடு, சபாநாயகர் பதவியை விட்டு விலகவும் மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக பிரகாஷ் காரத்துக்கும் சாட்டர்ஜிக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான ஜோதிபாசுவும் சாட்டர்ஜியை ஆதரித்து வருகிறார்.
இந் நிலையில் சோம்நாத்தை பதவி விலக வைக்க ஜோதிபாசுவின் உதவியை காரத் தரப்பு நாடியுள்ளது. ஆனால், ஜோதிபாசுவை கொல்கத்தா சென்று சந்தித்த சாட்டர்ஜி தனது தரப்பு நிலையை விளக்கினார். இதனால் ஜோதிபாசு எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.
பாஜகவுடன் சேர்ந்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடியாது என்று சோம்நாத் சட்டர்ஜி கூறி வருகிறார். மேலும் சபாநாயகர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது, இதில் நான் நடுநிலை வகிக்கவே விரும்புகிறேன் என காரத்திடம் அவர் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ஜோதிபாசுவை சந்தித்து சோம்நாத் சட்டர்ஜியை ராஜினாமா செய்ய வற்புறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், சாட்டர்ஜி பதவியில் நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. இதன்மூலம் அரசுக்கு எதிரான ஒரு ஓட்டு குறையும் என்பது அந்தக் கட்சியின் கணக்கு.
இது தொடர்பாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜோதிபாசுவை சந்தித்து வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் சோம்நாத் சட்டர்ஜியையும் பிரணாப் முகர்ஜி சந்தித்து பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு முடியும் வரை பதவி விலக மாட்டேன் என சோம்நாத் சட்டர்ஜி கூறியதாக கொல்கத்தா பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தன்னை ஒரேயடியாக நெருக்கினால் கட்சியை விட்டே விலகிவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.
நம்பிக்கை தீர்மானத்தில் அரசு தோற்றாலும் வென்றாலும் அதன் பின்னர் சாட்டர்ஜி விலகுவார் எனத் தெரிகிறது.