13 எம்.பிக்கள் 'கட்சி மாறி' வாக்களித்ததால் தப்பிய மன்மோகன் அரசு
டெல்லி: பல்வேறு கட்சிகளின் 13 எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் அணி மாறி வாக்களித்ததால், மன்மோகன் சிங் அரசு தப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
நேற்று லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுக்களும், எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. முதலில் 272 வாக்குகள் கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால் கூடுதலாக 3 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். எதிர்த் தரப்பை விட கூடுதலாக 19 வாக்குகள் கிடைத்து வெற்றியும் கிடைத்துள்ளது.
அரசுக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகளில் 13 பேர் எதிர் அணிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களால்தான் அரசு வெல்ல முடிந்தது. தங்களது கட்சி கொறடா உத்தரவை மீறி இவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கேன்டீனில் 'டேரா' போட்ட எம்.பிக்கள்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், 3 பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் டீ குடித்துக் கொண்டிருந்தனராம். வாக்களிக்க வருமாறு ஒலித்த பெல் ஒலி கூட அவர்களுக்குக் கேட்கவில்லையாம். இந்த 3 பேருமே ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டனர்.
அரசுக்கு ஆதரவாக சோம்பாய் படேல், பாபுபாய் கட்டாரா, பிரிஜ்பூஷன் சரண்சிங், சந்திரபன் சிங் (ம.பி.,), ஹரிபாவ் ரத்தோட் (மகாராஷ்டிரா), மஞ்சுநாத் (கர்நாடகா), சங்லியானா ஆகியோர் மாற்றி வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ராம்ஸ்வரூப் பிரசாத் மாற்றி வாக்களித்துள்ளார். பிஜூ ஜனதாதளத்தைச் சேர்ந்த ஸ்வெய்ன் மாற்றி வாக்களித்துள்ளார்.
தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஆதிகேசவலு, ஜகன்னாத் மாற்றி வாக்களித்துள்ளனர்.
இவர்கள் தவிர மதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செஞ்சிராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாஜகவின் மனோரமா பரத்வாஜ், சிவசேனாவின் தூக்காராம், அகாலிதளத்தின் சுக்தேவ் சிங்லிப்ரா, ஐக்கிய ஜனதாதளத்தின் கோயா ஆகியோர் வாக்களிக்கவில்லை.
எதிர்க்கட்சியினர் மாற்றி வாக்களித்தது குறித்து மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், யாரும் கட்சி மாறி ஓட்டு போடவில்லை. பா.ஜ.க உட்பட எதிர்கட்சியை சேர்ந்த 7 பேர் அரசுக்கு ஆதரவாக ஓட்டு அளித்துள்ளனர். 5 பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
கட்சி மாறி ஓட்டுப் போட்டவர்களில் அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் இருப்பது பாஜக. இது அந்தக் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மொத்தம் 13 பேர் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜகவினர். எனவே பாஜகவின் புண்ணியத்தால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது என்று தாராளமாக கூறலாம்.