'அந்தர் பல்டி' கருணாநிதி-'அறிக்கை மன்னர்' பாலு: இந்து முன்னணி
சென்னை: சேதுசமுத்திரத் திட்டம் தொடர்பாக அடுத்தடுத்து அந்தர் பல்டி அடித்து வருகிறார் முதல்வர் கருணாநிதி. தினசரி கப்பல் ஓடும் என கூறி அறிக்கை மன்னராக மாறியுள்ளார் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
ராம.கோபாலன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
ராமாயணத்தின் அடையாளமாக திகழும் கற்புக்கரசி சீதாதேவியை இலங்கையிலிருந்து மீட்பதற்காக நளனும், நீலனும் கட்டிய பாலத்தை சேது சமுத்திர திட்டம் என்ற பெயரால் இந்து விரோதிகள், ராம விரோதிகள் உடைக்க முயற்சித்து வருகிறார்கள்.
ராமன் பிறக்கவில்லை. கற்பனை என்று மத்திய அரசு சொல்கிறது. ராமன் எந்தக் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தான் என்று கருணாநிதி கேள்வி எழுப்பி இந்துக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.
பின்னர் கருணாநிதி தனது பிறந்த நாளில் தமிழகத்தில் உள்ள குப்பனும், சுப்பனும் நலம்பெற, தமிழகம் செல்வச் செழிப்பில் திகழ, தொழில் வளம் பெருக மத்திய அரசிடம் யாசகம்' கேட்கிறார். சேது சமுத்திர திட்டத் திற்கு சேதுராம் என்று பெயர் மாற்றியாவது நிறைவேற்றுங்கள் என்கிறார்.
டி.ஆர். பாலுவோ தினம் தினம் சேது சமுத்திர கப்பல் விரைவில் ஓடும் என்று அறிக்கை விட்டு அறிக்கை மன்னர் ஆகிவிட்டார். ராமர் பாலம் என் பதெல்லாம் புராணீகர்களின் கூற்று.
ராமாயணம் நடைபெறவில்லை என்று கூறிவிட்டு, நான் எல்லா ராமாயணமும் படித்திருக்கிறேன், அது ராமர் பாலம் இல்லை என்று அந்தர்பல்டி அடிக்கிறார் கருணாநிதி.
தற்போது மத்திய அரசோ கம்ப ராமாயணத்தில் இல்லாத விசயத்தை இருப்பதாகச் சொல்லி, பலமுறை மன வேதனைக்கு தள்ளப்பட்ட இந்துக் களின் நம்பிக்கையை மீண்டும் சீண்டிப் பார்க்கிறது. ராமர் பாலம் கட்டினார். அதை அவரே உடைத்து விட்டார் என்பது தற்போதைய கூற்று. இது புண்ணுக்கு புணுகு பூசும் முயற்சி.
இவர்களின் வரலாற்றுத் திரிபு வாதங்கள் மக்களிடம் எடுபடாது. இந்த பொய்யர்களின் புதிய கம்ப ராமாயண கண்டுபிடிப்புகளை மக்கள் நம்பத்தயாராக இல்லை.
போலித்தனமாக பேசி மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லும் அரசியல் வாதிகள் மத்தியில் இந்துக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, ஸ்ரீ ராமர் பாலம் காக்கப்பட வேண்டும்; இதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மிகத் துணிச்சலாக பேசிய கருத்து இந்துக்களுக்கு மனநிறைவைத் தருகிறது.
இதற்காக இந்து முன்னணி ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இது ராமர் பாலம் காக்கும் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கக் கூடியதாக அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார் ராம. கோபாலன்.