அமைச்சர் ராஜா மீது மேலும் ஒரு கடத்தல் புகார்
சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கடத்தி வைத்திருப்பதாக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது இன்று இன்னொரு ஆள் கடத்தல் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ராஜா 12 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைத்தறித்துறை அமைச்சர் ராஜா மீது ஆள் கடத்தல் புகார் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பழனிச்சாமியும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று ராஜா மீது மேலும் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சுப்ரமணியம் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
அதில் தனது சகோதரி கணவரான சுப்ரமணியம் என்பவரை அமைச்சர் ராஜாவின் அடியாட்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுகுறித்து 12 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஈரோடு எஸ்.பி, பெருந்துறை இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் ராஜா மீது அடுத்தடுத்து ஆள் கடத்தல் புகார்கள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications