மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராஜபக்சேவுக்கு மன்மோகன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மன்மோகன் சிங் முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைத் தாக்குதலை நிறுத்துமாறு ராஜபக்சேவை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

15வது தெற்காசிய கூட்டமைப்பு ( சார்க்) மாநாடு இன்று கொழும்பு நகரில் தொடங்குகிறது. எட்டு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் இதில் பங்கேற்கின்றனர். தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த 2 நாள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்றே கொழும்பு போய் விட்டார். கட்டுநாயகே, பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே, வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமா ஆகியோர் வரவேற்றனர். சிவப்புக் கம்பள வரவேற்புக்குப் பின்னர் மன்மோகன் சிங் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொழும்பு நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இன்று தொடங்கும் சார்க் மாநாட்டில் புதிய தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவரிடம் தற்போதைய தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பினை ஒப்படைக்கிறார்.

இதையடுத்து மாநாடு தொடங்குகிறது. தீவிரவாதம், வறுமை, ஏழ்மை, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக தீவிரவாதம் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். அதிபரின் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

இரு தரப்பு பிரச்சினைகள், தீவிரவாதம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அப்போது பிரதமரும், ராஜபக்சேவும் விவாதித்தனர்.

பின்னர் ராஜபக்சேவும், பிரதமரும் தனியாக சந்தித்துப் பேசினர். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அந்த பேச்சுவார்த்தையின்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து பிரதமர் ராஜபக்சேவிடம் விவாதித்துள்ளார்.

கச்சத்தீவை சுற்றிலும் உள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்தால் அவர்களை சுடக் கூடாது என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்றும் அப்போது ராஜபக்சேவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார். எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடாமல் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இரு நாட்டு கடற்படைகளின் கூட்டு ரோந்துக்கு ஏற்பாடு செய்யலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

பிரதமரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ராஜபக்சே, இதுதொடர்பாக விரைவில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக பிரதமரிடம் உறுதியளித்தார்.

பாக். பிரதமருடன் இன்று சந்திப்பு

இன்று பாகிஸ்தான் பிரதமருடன் மன்மோகன் சிங் பேச்சு நடத்தவுள்ளார். பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்து, புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் இந்தியப் பிரதமருடன் அந்நாட்டு பிரதமர் பேச்சு நடத்தவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கிலானியுடனான சந்திப்பின்போது காபூல் இந்திய தூதரகம் மீதான தாக்குதலில் ஐஎஸ்ஐக்கு தொடர்பு இருப்பது குறித்து மன்மோகன் சிங் புகார் கூறுவார் என்று தெரிகிறது.

--

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+