செளதி சிறையில் வாடும் குமரி மீனவர்கள்
சென்னை: செளதி சிறையில் வாடிக் கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கக் கோரி முதல்வர் கருணாநிதிக்கு அவர்களது மனைவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சன் டேவிட், ஜான்சன் அந்தோணி தாஸ், சில்வர் இருதயம் ஆகியோர் செளதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2005ம் ஆண்டு அவர்கள் செளதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி அவர்களது மனைவியர் முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சிமி ஜான்சன், ஜெனிட் சில்வர் இருதயம், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மேரி டேவிட் ஆகியோர் அளித்துள்ள மனுவில்,
ஜான்சன் டேவிட், ஜான்சன் அந்தோணிதாஸ், சில்வர் இருதயம் ஆகியோர் 10 வருடங்களாக செளதி அரேபியாவில் உள்ள அல்ஜீபைலில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
2005ம் ஆண்டில் செளதி அரேபியக் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த எங்கள் கணவர்களிடத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், ஒரு பையைக் கொடுத்து கரையில் இருக்கும் அவர்களது உறவினரிடத்தில் ஒப்படைக்கும்படி கூறியுள்ளனர்.
அந்தப் பையை வாங்கிக் கொண்டு வரும்போது துறைமுகத்தில் இருந்த போலீசார் பையை பறிமுதல் செய்து, எந்தவித காரணமும் கூறாமல், சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் செளதி நீதிமன்றம், 3 பேருக்கும் முதலில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. பின்னர் 15 ஆண்டுகள் தண்டனை என்று அறிவித்தது.
3 வருடங்களாக சிறையில் இருப்பதால் எங்கள் குடும்பத்தினர் ஒருவேளை உணவுக்குகூட வழியில்லாமல் மிகவும் வறுமையில் வாடுகின்றோம். எனவே, முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் கணவர்களை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்தப் பையில் என்ன இருந்தது என்ற விவரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications