கருணாநிதியை பற்றி பேச ராமதாஸூக்கு என்ன தகுதி?-வீரபாண்டி
சென்னை: வன்னியர்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் திட்டங்களைத் தீட்டி மக்கள் பாராட்டும் வகையில் செயல்படும் முதல்வர் கருணாநிதி பற்றி பேச ராமதாஸூக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரியாரின் கொள்கை வழியில் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடினார் அண்ணா. அதே காலக்கட்டத்தில் மாணவ பருவத்தில் இருந்த கருணாநிதி, சமூக நீதி காக்க தன்னுடைய 11வது வயதில் போராட்டத்தில் இறங்கினார். சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று வேஷம் போடும் ராமதாஸ், கருணாநிதியை போல நேரடியாக போராட்டத்தில் இறங்கியதுண்டா?
வன்னியர் சங்கத்தி்ல் பிளவு ஏற்பட்டு ஒரு பிரிவுக்கு தலைமை ஏற்று மக்களை சந்தித்தபோது நானோ என் குடும்பத்தில் உள்ளவர்களோ தேர்தலில் நிற்க போவதில்லை என்றும், சட்ட சபையையோ, நாடாளுமன்றத்தையோ நானோ, எனது வாரிசுகளோ மிதிக்கப் போவதில்லை என்று முழங்கிய ராமதாஸின் கொள்கை என்னவாயிற்று?
இவர்தான் சமூக நீதி காவலரா? சமூக நீதி காத்துவரும் முதல்வர் கருணாநிதிதான் சமூக நீதி காவலர் என்பது வன்னியர் உள்பட அனைத்து சமுதாய மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
ஆரம்ப காலத்தில் வன்னியர் சமுதாயத்துக்காக உழைத்தவர்களின் உழைப்பை பயன்படுத்தி மக்களிடம் அறிமுகமானவர்தான் ராமதாஸ். அறிமுகப்படுத்தியவர்களை ஓரங்கட்டிவிட்டு தனது குடும்பத்தினரையும், உறவினர்களையும் முன்னிலையப்படுத்தி வருகிறார். இதற்கு உதாரணம் தற்போதைய வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு.
கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றுபவர் கருணாநிதி. அந்த அடிப்படையில் வன்னியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வன்னியர் உள்பட 108 வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடாக 20 சதவீதத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்காக போராடுவதாக தன்னை காட்டிக் கொள்ளும் ராமதாஸ், கடந்த ஆட்சியில் ஆர்ப்பாட்டம் செய்து கைதானபோது, தன்னை விடுவிக்க வேண்டும் என்பதற்காக தனது மனைவியை தூது அனுப்பி தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள முயற்சித்தவர் ராமதாஸ்.
வன்னிய இன மக்களின் உழைப்பையும் உயிரையும் உறிஞ்சிக் கொண்டு, அதன்மூலம் தானும், தனது குடும்பமும் பதவி சுகம் அனுபவித்து வருகிறார் ராமதாஸ். தினமும் தனது அறிக்கையும் போட்டோவும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை விளம்பரப்படுத்திக் கொண்டு மக்களை குழப்புகிறார்.
திமுக ஆட்சியில் இருக்கும்போது வன்னியர்களுக்காவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் திட்டங்களைத் தீட்டி ஒட்டு மொத்த சமுதாய மக்களும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வரும் முதல்வர் கருணாநிதி பற்றி பேச ராமதாஸூக்கு என்ன தகுதி உள்ளது? என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications