நெல்லைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ்காரர் எழுதியதாக சந்தேகம்
நெல்லை: நெல்லை மாநகரில் 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது. போலீஸ்காரர் ஒருவரே இதை எழுதியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அப்துல் கபூர் உள்ளிட்ட தீவிரவாதிகளை சமீபத்தில் கைது செய்த போலீஸார், நெல்லை, சென்னை மாநகரைத் தகர்க்கும் சதித் திட்டத்தை முறியடித்தனர்.
இதையடுத்து இரு நகரங்களிலும் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில், நெல்லை மாநகரில் ஒரு போலீஸ் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் உள்ளனர். ஆனால் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிக்கும் செயல் அதிக அளவில் நடக்கிறது.
போலீஸார் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சங்கிலிப் பறிப்பு குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் நெல்லை கலெக்டர் அலுவலகம், மேயர் பங்களா, துணை மேயர் பங்களா, வ.உ.சி மைதானம், பிரபல ஜவுளிக் கடைகளில் குண்டு வெடிக்கும்.
இப்படிக்கு பீர் முகம்மது, சமாதானபுரம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் ஆணையர் மஞ்சுநாதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்ைத எழுதியது போலீஸ்காரராக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications