அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் சிக்கல்-சிபிஐ
மதுரை: அதிமுகவுடனான கூட்டணி அமைப்பதில் சேது சமுத்திரத் திட்டம், பொடா சட்டம் உள்பட பல பிரச்சினைகளி்ல் கருத்து வேறுபாடு உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
அக் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
அமர்நாத் கோவில் நில பிரச்சினையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை வைத்து பாஜக அகில இந்திய அளவில் மத வெறி அரசியலை முடுக்கி விட்டுள்ளது.
காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காஷ்மீரில் தீவிரவாதம் தலை தூக்கியபோது கூட இந்த அளவுக்கு மதவெறி அரசியல் இருந்தது இல்லை. அங்கு ஒற்றுமையை காக்க வேண்டியது இந்திய அரசின் ஜனநாயக கடமை.
பாஜக காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் ஏற்பட வேண்டும். அதற்கான வாய்ப்புள்ளது. புதிய அணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தற்போது உள்ளன. தமிழக அரசியல் சூழல் குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
கேள்வி: வரும்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சியுடன் உங்கள் கட்சி கூட்டணி அமைக்கும்?
ராஜா: தேசிய அளவில் அரசியலில் ஒரு முடிவெடுக்கும்போது அதன் அடிப்படையில் தமிழகத்திலும் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
கேள்வி: ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி பற்றி பேசினால், பேசத் தயார் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ராஜா: சேது சமுத்திரத் திட்டம், பொடா சட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் எங்களுக்குள் ஒத்த கருத்து இல்லையே? என்றார் ராஜா.
அத்வானியை ஏற்றால் கூட்டணி-பாஜக:
இதற்கிடையே காரைக்குடியில் நிருபர்களிடம் பேசிய பாஜக தலைவர் இல.கணேசன், அத்வானியை பிரதமராக ஏற்கும் தமிழக கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.
அவர் கூறுகையில், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 67ம் ஆண்டிற்கு பின் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியாமல் போனது போன்ற நிலை திமுகவிற்கும் ஏற்படும். திமுகவிற்கு மாற்று கட்சி எது என மக்கள் சிந்திக்கின்றனர்.
பாமக மாநிலத்தில் கூட்டணி இல்லை, மத்தியில் உண்டு என்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கூட்டணி இல்லை, மாநிலத்தில் உண்டு என்ற நிலை எடுத்துள்ளனர்.
இரு கட்சிகளும் திமுக கூட்டணியை விட்டு தைரியமாக வெளியேற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெளிவாகக் கூறியுள்ளார் என்றார்.
பல்வேறு சேனல்கள் மூலமாக அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications