ராஜீவ் கேல் ரத்னா-அர்ஜூனா விருதுகள் அறிவிப்பு
டெல்லி: கடந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். டோனி, அனுப் ஸ்ரீதர், பஜ்ரங்லால் தாக்கர் ஆகியோர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களை ஊக்குவிக்க ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
2007ம் ஆண்டுகான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய இளைஞர் மேம்பாட்டு அமைச்சகம்.
விளையாட்டு துறையில் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பெறுகிறார்.
அர்ஜூனா விருது பெறுவோர்:
பெய்ஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் படகுப் போட்டிப் பிரிவில் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள பஜ்ரங்கலால் தாக்கர், மற்றும் அனுப் ஸ்ரீதர், டோம்பி தேவி, சித்ரா கே சோமன், அவ்நீத் கௌர் சித்து ஆகியோர் பெறுகின்றனர்.
இவர்களை தவிர 2006ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் சூப்பர் ஹெவிவெய்ட் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற பாக்ஸர் ஜான்ஸன் வெர்கிஸ், ஜூனியர் உலக செஸ் சாம்பியன் ஹிரிகா ட்ரோனாவெல்லி, ஹாக்கி வீரர் பிரப்ஜோத் சிங், கோல்ப் வீரர் அர்ஜூன் அட்வால், மல்யுத்த வீரர் அல்கா டோமர், பவர் லிப்ட் வீரர் பார்மன் பாட்ஷா ஆகியோரும் அர்ஜூனா விருது பெறுகின்றனர்.
2008ம் ஆண்டுக்கான தியான் சந்த் விருது, தடகள வீரர் ஹக்கம் சிங், ஹாக்கி வீரர் முக்பெய்ன் சிங் மற்றும் மல்யுத்த வீரர் கியான் சிங் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
பயிற்சியாளர்களுக்கான த்ரோணாச்சார்யா விருது-2007, வில்வித்தை பிரிவில் சஞ்சீவ் குமார், பாக்ஸிங் பிரிவில் ஜக்தீஷ் சிங், வாலிபால் பிரிவில் ஜி.இ.ஸ்ரீதரன் ஆகியோர் பெறுகின்றனர்.
விருது வழங்கும் விழா வரும் 29ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்கி, வீரர்களை கௌரவிக்கிறார்.












Click it and Unblock the Notifications