கோவிலுக்கு பூட்டு மேல் பூட்டு - பெண்கள் போராட்டம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள வீர மகாகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து ஒருவர் பூட்டு போட்டார். இதனால் ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மேலும் ஒரு பூட்டை பூட்டு பூட்டினர்.
கும்பகோணம் அருகே உள்ளது திருவலஞ்சுழி. இங்குள்ள கீழ ரத வீதியில் வீர மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுவினர் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.
கடந்த 15ம் தேதியன்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் பக்தர்கள் வீர மகா காளியம்மனுக்கு திருவிழா நடத்தினர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க முடிவு செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவர் கோவில் கதவை சாத்தி பூட்டு போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கோவிலுக்கு வெளியே சுவாமிக்கு விழா எடுத்து கொண்டாடினர். விழா முடிந்த பின்பு மகளிர் சுய உதவிக் குழுவினர், கோவிலுக்கு மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டினர்.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் குழப்பம் காரணமாக கோவில் இரண்டு பூட்டுகளால் பூட்டப்பட்டு கிடக்கிறது.












Click it and Unblock the Notifications