சென்னை-மாடியிலிருந்து குதித்த மனநோயாளி சாவு
சென்னை: மனநலம் பாதித்த வாலிபர் நான்காவது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அவரது பெற்றோர் கண் எதிரிலேயே நடந்தது.
சென்னை முத்தியால்பேட்டை புட்டிசாகிப் தெருவை சேர்ந்தவர் உசேன் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. உசேனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவரை மாற்ற எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உசேனிற்கு மனநலம் பாதித்தது. அவருக்கு மத ரீதியாக சிகிச்சை அளித்து வந்தனர். அவரை அவரது தந்தை சயித் முகமது, தாய் முகமதா ஆகியோர் உடனிருந்து கவனித்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மந்திரிப்பதற்காக, பாரிமுனை பி.வி. அய்யர் தெருவில் உள்ள தர்காவுக்கு உசேனை அழைத்துச் சென்றனர். தர்கா திறக்காததால் வெளியே அமர்ந்திருந்தனர். நான்கு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ளது அந்த தர்கா.
அப்போது, உசேன் திடீரென அந்த கட்டிடத்தின் நான்காவது மாடிக்கு சென்றார். அவரை கீழே இறங்குமாறு பெற்றோர்கள் கூறினார்கள். அதற்குள் மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்தார் உசேன். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.