அப்பாடா.. முதல்வரானார் சிபு: 1ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்

64 வயதாகும் சோரன் முதல்வராகப் பதவியேற்பது இது 2வது முறையாகும். மூன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சோரன் மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது மத்திய அரசுக்கு ஆதரவளிக்க, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பதவி அல்லது ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவியை தனக்கு தர வேண்டும் என காங்கிரசிடம் சிபுசோரன் நிபந்தனை விதித்தார்.
மத்திய அரசு வென்ற பின், தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம், முதல்வர் பதவி தான் வேண்டும் என அடம் பிடிக்க ஆரம்பித்தார்.
இவருக்காக முதல்வர் மதுகோடாவிடம் காங்கிரஸ் கெஞ்சிக் கூத்தாடி பதவியை ராஜினாமா செய்ய வைத்தது.
ஆனாலும் மதுகோடா மற்றும் 6 சுயேச்சைகளின் ஆதரவு சிபுசோரனுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலையிட்டு தீர்த்து வைத்தார்.
இதையடுத்து 81 பேர் கொண்ட சட்டசபையில் சிபுசோரனுக்கு 42 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து நேற்று தலைநகர் ராஞ்சியில் உள்ள மொரபாடி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் சையத் சப்தே ரஸி, சிபுவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஜார்கண்ட் மாநிலம் உருவான பின் பதவியேற்கும் 6வது முதல்வர் சிபுசோரன் ஆவார். கடந்த 2005ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே வென்ற சிபு, காங்கிரஸ்-லாலு ஆதரவோடு முதல்வராக பதவியேற்றார்.
ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 9 நாட்களில் ஆட்சியை இழந்தார். தற்போது மீண்டும் முதல்வராகிவிட்டார்.
சிபுவுடன் 6 சுயேச்சை எம்எல்ஏக்களும், 3 ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியினரும், ஒரு பார்வர்டு பிளாக், ஒரு தேசியவாத கட்சி எம்எல்ஏக்கள் ஆகியோரும் அமைச்சர்களாகியுள்ளனர்.
சிபுசோரன் அரசுக்கு காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகியவை வெளியில் இருந்து ஆதரவளிக்கின்றன. புதிதாக பதவியேற்றுள்ள சிபுசோரன் வரும் 1ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications