பாஜக: எச்.ராஜா மீது தீண்டாமை கொடுமை வழக்கு
காரைக்குடி: தமிழக பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா, திமுக நகராட்சித் தலைவர் உள்பட 33 பேர் மீது தீண்டாமை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செக்காலை சிவன் கோவில் ஊரணிக் கரையி்ல் இருந்த முனீஸ்வரன், விநாயகர் கோவில்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக கூறி கடந்த 21ம் தேதி நகராட்சி ஊழியர்கள் கோவில்களை அகற்றினர்.
இதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சனை தொடர்பாக பாஜக மாநிலத் துணை தலைவர் எச்.ராஜா தலைமையில் அவரது கட்சியினருக்கும் நகராட்சி தலைவர் முத்துதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்சனை பெரிதானதை அடுத்து போலீஸார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில், தீண்டாமைக் கொடுமை பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளனர்.
இதையடுத்து நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக ராஜா உள்பட 30 பாஜகவினர் மீதும், பாஜக தலித் அணி மாவட்டத் தலைவர் சேகரை ஜாதியை கூறி திட்டியதாக நகராட்சித் தலைவர் முத்துதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதும் காரைக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications