விடுதலை செய்யக் கோரி பிரேமானந்தா மனு தாக்கல்
சென்னை: கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சாமியார் பிரேமானந்தா, அண்ணா பிறந்த நாளையொட்டி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த பல இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பிரேமானந்தா, அவரது சீடர் கமலானந்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையிலும், மற்றவர்கள் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அண்ணா பிறந்த நாளையொட்டி தங்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பிரேமானந்தா, கமலானந்தா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், 1994ம் ஆண்டு கைது செய்யப்பட்டோம். 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுவரை ஒருமுறை கூட ஜாமீனில் நாங்கள் விடுதலையாகவில்லை.
இதுவரை மொத்தம் 19 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறையில் கழித்துள்ளோம். எங்களுக்கு தண்டனை வழங்கிய புதுக்கோட்டை நீதிமன்றம், மத்திய மாநில அரசுகளின் தண்டனை குறைப்பு சலுகை எங்களுக்குப் பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.
அண்ணா பிறந்த நாளையொட்டி பல கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஆனால் புதுக்கோட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காரணம் காட்டி எங்களுக்கு இந்த சலுகை மறுக்கப்படுகிறது.
கைதகிளின் தண்டனைக் குறைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் உள்ளது. கோர்ட் உத்தரவால் இந்த அதிகாரத்தில் யாரும் குறுக்கிட முடியாது. எனவே புதுக்கோட்டை கோர்ட்டின் தீர்ப்பு பாரபட்சமானது. எங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications