மதுரையிலும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு: பங்குகள் மூடல்
மதுரை: மதுரையில் பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பங்குகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளன.
சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் சில வாரங்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் தட்டுப்பாடு ஓரளவுக்கு சீரடைந்து வருகிறது. இந்நிலையில் மதுரையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 115 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு நாள்தோறும் 50,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒன்றரை லட்சம் லிட்டர் டீசலை பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தற்போது பெட்ரோலிய நிறுவனங்கள் தமது விநியோகத்தில் 20 முதல் 30 சதவிகிதம் வரை விநியாகத்தை குறைந்துள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல பெட்ரோல் பங்குகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்திடம் கேட்டபோது, எரிபொருள் விநியோகம் குறைந்துள்ளதால், பெட்ரோல் பங்குகள் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பெட்ரோலிய நிறுவனங்களிடம் விநியோகத்தை அதிகரிக்கும்படி கேட்டுள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications