கோகலே ஹால்-இடிக்க ஒரு வாரத்திற்கு தடை
சென்னை: சென்னையில் உள்ள 94 ஆண்டு பழமை வாய்ந்த கோகலே ஹால் அரங்கை இடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் ஒரு வாரத்திற்கு கோகலே ஹாலை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோகலே ஹாலை உள்ளடக்கிய பெசன்ட் நினைவு கட்டடத்ைத இடிக்க யங் மென்ஸ் இந்தியன் அசோசியேஷன் அமைப்பு தீர்மானித்தது. இந்த கோகலே ஹாலில்தான், அன்னி பெசன்ட் அம்மையார் ஹோம் ரூல் இயக்கத்தை அறிவித்தார்.
இத்தகைய பெருமை படைத்த, 94 ஆண்டு பழமை வாய்ந்த கோகலே ஹாலை இடிப்பதை எதிர்த்து இந்த சங்கத்தின்ஆயுட்கால உறுப்பினர்களில் ஒருவரான டி.சி.சங்கர்ராஜு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, முதலில் சிவில் கோர்ட்டைத்தான் மனுதாரர் நாட வேண்டும். அதற்கு அவருக்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் சிவில் கோர்ட்டை நாடினால், உரிய உத்தரவுகளை அவர் பெறலாம்.
7 நாட்களுக்குள் மனுதாரர் சிவில் கோர்ட்டை அணுகத் தவறினால் கோகலே ஹால் நிர்வாகத்தினர் தங்களது விருப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். ஒரு வாரத்திற்கு இடிக்கும் பணியையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு முதலில் நீதிபதி குலசேகரன் முன்பு ஆகஸ்ட் 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இடிக்கும் பணிக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பே கட்டடத்தின் பல முக்கிய பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications