மின் தடை: மாறிய மணமகள்கள்-மாற்றித் தாலி கட்டிய மாப்பிள்ளைகள்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.
இங்கு 40 ஜோடிளுக்கு இலவச கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. கல்யாணத்திற்கான ஏற்பாடுகளால் அந்தக் கோவில் வளாகம் முழுவதும் உறவினர்கள், குடும்பத்தினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அனைவரும் முகூர்த்த நேரத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். எல்லாம் ரெடியானது, முகூர்த்த நேரமும் வந்தது. மாப்பிள்ளைகள் கையில் தாலி எடுத்துக் கொடுக்கப்பட மங்கள மேளம் முழங்க மாப்பிள்ளைகள் தாலி கட்ட தயாராயினர். அப்போது திடீரென மின்சாரம் போனது.
இதனால் கல்யாணம் நடந்த இடத்தில் பெரும் குழப்பமானது. இந்த களேபரத்தில் வீராசாமி, பாலமுருகன் ஆகிய இரு மாப்பிள்ளைகள் தவறுதலாக வேறு பெண்களுக்குத் தாலி கட்டி விட்டனர்.
வீராசாமி தாலி கட்ட வேண்டிய பெண் சுப்புலட்சுமி. ஆனால் அவரோ சுப்புலட்சுமிக்கு பக்கத்தில் நின்றிருந்த அவரது தோழிக்கு தாலி கட்டி விட்டார்.
அதேபோல பாலமுருகன், சிவகாமி என்பவருக்குப் பதில் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டி விட்டார்.
இதனால் அங்கு பெரும் குழப்பமாகி விட்டது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்ட பெரியவர்கள் கூடி பேசி பரிகார பூஜை ஒன்றை செய்ய தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து கட்டிய தாலிகளை கழற்றச் சொல்லி அவற்றுக்கு பரிகார பூஜை செய்தனர். பின்னர் உரிய மணமகள்களின் கழுத்தில் நல்ல விளக்கொளியில் மாப்பிள்ளைகள் தாலி கட்ட கல்யாணம் இனிதே முடிந்தது.












Click it and Unblock the Notifications