'சிரு'வுக்கு எதிராக 'யுவ கர்ஜனை'!
ஹைதாராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியை சமாளிக்க தனது மச்சான்கள் அத்தனை பேரையும் ஓரணியில் திரட்டியுள்ளார் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு.
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. சிரஞ்சீவி அரசியலில் பெரும் சக்தியாக மாறி தங்களது வாக்குகளைப் பதம் பார்த்து விடுவார் என்ற பயத்தில் இவை உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களையும் கட்சியையும், வாக்கு வங்கியையும் காத்துக் கொள்ள இந்தக் கட்சிகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதில் சந்திரபாபு நாயுடு தனது மைத்துனர்களான ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணா ஆகியோரையும், ஹரிகிருஷ்ணாவின் மகன்களான ஜூனியர் என்.டி.ஆர், கல்யாம் ராம் ஆகியோரை ஒருங்கிணைத்து சிரஞ்சீவிக்கு எதிராக களத்தில் இறக்குகிறார்.
யுவ கர்ஜனை என்ற பெயரில் இவர்கள் இணைந்து ஒரு பிரமாண்ட மாநாட்டை நடத்தவுள்ளனர். ராமாராவ் உருவாக்கிய கட்சி அழியத்தான் வேண்டுமா என்ற கொக்கியைப் போட்டு இவர்களை சந்திரபாபு நாயுடு வளைத்துள்ளாராம். பாலகிருஷ்ணாவும், சந்திரபாபு நாயுடுவும் சம்பந்திகளும் கூட. பாலகிருஷ்ணாவின் மகளைத்தான் நாயுடுவின் மகன் மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்தி, சந்திரபாபு நாயுடுவை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த இவர்கள் உறுதி பூண்டுள்ளனராம். இதுகுறித்து அனைவரும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக குண்டூரில் அடுத்த மாதம் யுவ கர்ஜனை என்ற பெயரில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவது என்று தீர்மானித்துள்ளனர். மேலும், தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர்களையும் திரட்டி இந்த மாநாட்டில் பங்கேற்க வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆந்திராவின் பல முக்கிய நகரங்களில் என்.டி.ஆரின் சிலைகளை நிறுவவும், என்.டி.ஆர். குறித்து பெரிய அளவில் பிரசாரம் செய்யவும் தீர்மானித்துள்ளனர்.
மொத்தத்தில் இத்தனை காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த என்.டி.ஆர். பெருமையை, சிரஞ்சீவியை சமாளிப்பதற்காக வெளியில் எடுத்துள்ளார் நாயுடு என்பதே உண்மை.
சிரஞ்சீவியிடமிருந்து நாயுடுவைக் காப்பாற்றுவாரா என்.டி.ஆர். என்பது தேர்தலின்போது தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications