நியமன எம்எல்ஏ பதவி: அரவாணிகள் கோரிக்கை
நெல்லை: அரவாணிகளுக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் என்று அரவாணிகள் சமூக முன்னேற்ற சங்கத் தலைவி பிரியா பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அரவாணிகளும் சமூக அரசியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மாதர் சங்க தலைவி மல்லிகா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் திருநங்கை பிரியா பாபு பேசியதாவது:
சமூகத்தில் அரவாணிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. 99 சதவீத அரவாணிகள் ஆண்களாக பிறக்கிறார்கள். அரசு எங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியலிலும் அரவாணி என குறிப்பிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அரவாணிகளுக்கும் அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் எம்எல்ஏ பதவிகளையாவது நியமன அடிப்படையில் வழங்க வேண்டும். இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாங்கள் பாடுபடுகிறோம். எங்களை பாவம் என்ற கண்ணோடத்தில் அணுக வேண்டாம். எங்களை ஒதுக்காமல் இருந்தாலே போதும் என்றார்.












Click it and Unblock the Notifications