குமரியில் கன மழை-கடல் சீற்றம், ஆறுகளில் வெள்ளம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மேலும் பலத்த சூறாவளிக் காற்றும் வீசுவதால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
கன மழையால் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பலத்த காற்று காரணமாக ராமன்துறை, தேங்காய்பட்டணம், புதுக்கடை ஆகிய இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதனால் இப் பகுதிகளில் கடலை ஒட்டிய சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தால் ராமன்துறையில் கல்லறைத் தோட்டத்திற்குள்ளும் வீடுகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
அதே போல மணக்குடி, கீழ மணக்குடி, சங்கிலிதுறை ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்பட்டது. 10 அடி கடல் அலைகள் எழுந்ததால் பீதி பரவியது.
குமரியில் இன்று காலை சூரிய உதயத்தை பார்க்க வந்தவர்கள் கடல் சீற்றத்தைக் கண்டு அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவளம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கடல் அலைகள் இழுத்து சென்றன. கடல் சீற்றத்தின் காரணமாக விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பலத்த மழையால் தாமிரபரணி, வல்லியாறு, பழயாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆற்றுப் படுகைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழயாற்றில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications