வடிவேலு வீடு மீது தாக்குதல் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு
சென்னை: வீடு தாக்கப்பட்டது தொடர்பாக நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் வடிவேலுவுக்கும் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தாக்குதலைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்ற வடிவேலு அங்கு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், என் வீட்டின் மீதும், அலுவலகத்தின் மீதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் 30 பேர் என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீடு மற்றும் அலுவலகத்துக்கும் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் இரவு விசாரணை நடத்தினார். வடிவேலு வீடு உள்ள தெருவில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வியகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி, அத்துமீறி சட்டத்திற்குப் புறம்பாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
வடிவேலு வீட்டுக்குப் பாதுகாப்பு:
வடிவேலுவின் வீடு மற்றும் அலுவலகத்திற்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வடிவேலுவுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் வீட்டில் கூடிய தொண்டர்கள்:
இந்த நிலையில், அடுத்த தெருவில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நேற்று இரவு பெருமளவிலான தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications