தர்மபுரி பஸ் எரிப்பு-சுப்ரீம் கோர்ட்டில் 30ம் தேதி விசாரணை
தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு வரும் 30ம் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
தர்மபுரி அருகே கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர்.
இதில் பஸ்சில் இருந்த மாணவிகள் மூன்று பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதி மன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ம் தேதி அன்று உத்தரவிட்டது.
அதே போன்று முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து சேலம் முதலாவது கூடுதல் செஷனஸ் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் அப்பீல் செய்தனர்.
ஆனால் சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்தது.
இந்த நிலையில் தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வரும் 30 ம் தேதிக்கு வருகிறது.