ஆங்கிலத்தில் பள்ளி முத்திரை: அரசு உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம்
நெல்லை: தமிழில் உள்ள பள்ளி முத்திரையை (ரப்பர் ஸ்டாம்ப்) ஆங்கிலத்தில் உடனடியாக தயார் செய்ய வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகளுக்கு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது அரசு. இதற்கான காரணம் தெரிவிக்கப்படாததால் ஆசிரியர்கள் குழம்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தலைமையில் கடந்த 23ம் தேதி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் தவறாமல் கலந்து கொள்ளும்படி அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு பறந்தது.
காலாண்டு விடுமுறை 23ம் தேதியில் இருந்து தொடங்கியுள்ள நிலையில் இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் பள்ளியில் எத்தனை கழிப்பறைகள் உள்ளன, மின்வசதி உள்ளதா போன்ற வழக்கமான கேள்விகளே இடம் பெற்றிருந்தன. மேலும் இதுவரை தமிழில் இருந்த பள்ளி முத்திரையை (ரப்பர் ஸ்டாம்ப்) ஆங்கிலத்தில் உடனடியாக தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற தகவல்களை மாதம் ஒருமுறை உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சமர்ப்பிப்பது வழக்கம்.
இது குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் போத்திலங்கம், நெல்லை மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறியதாவது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்துள்ளதாக கூறிக்கொள்ளும் அரசு பள்ளி முத்திரை கட்டாயம் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் காரணம் புரியவில்லை.
அதுவும் உடனடியாக தயார் செய்து அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் பலர் இரவோடு, இரவாக பள்ளி முத்திரையை ஆங்கிலத்தில் தயார் செய்து தலைமை ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர். அதற்கான காரணம் எதையும் அதிகாரிகள் கூறவில்லை.
தொடக்க கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி கடந்த 23ம் தேதி முதல் வரும் அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல தலைமை ஆசிரியர்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்ல 22ம் தேதி மாலை கிளம்ப ஆயத்தமாக இருந்தார்கள்.
இந்நிலையில் அன்றைய தினம் இரவே தலைமை ஆசிரியர்களுககு உத்தரவு பறந்துள்ளது. ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கேட்டுள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.