குடி, கும்மாளம்: கவுன்சிலர்கள் மீது வழக்கு-அதிகாரிகள் சஸ்பெண்ட்
விழுப்புரம்: திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் மற்றும் சிலர் குடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறுகையில், திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் சிலர் மது அருந்திய விவகாரத்தில் முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கவுன்சில்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழு விசாரணைக்கு பின்புதான் அவர்கள் மீதான நடவடிக்கை குறி்த்து தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த புகாரின் பேரில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜானிபாட்ஷா, கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ரகோத்தமன், அண்ணாத்துரை, மற்றும் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் மணி, வினோபா உள்பட சிலர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் மன்றத்தில் மது குடித்து கொச்சைபடுத்திய இவர்களது பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன.