மது ஒழிப்பில் சிறப்பு - 4 காவல் அதிகாரிகளுக்கு காந்தி விருது
சென்னை: மது ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செ.பெ.முருகேசன், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், துணைக் காவல் கண்காணிப்பாளர் தே.மகேந்திர வர்மன், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகர உதவி காவல் ஆய்வாளர் பா.குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உதவி காவல் ஆய்வாளர் ரவி ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க பணியாற்றியமைக்காக, 2008ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விருதுகளை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று முதலமைச்சர் வழங்குவார். இவ்விருதுடன் பரிசுத் தொகையாக தலா ரூ.20 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications