திமுகவின் தோல்விக்கு மின் வெட்டு காரணமாகி விடுமோ? வீராசாமி கவலை
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவும், அண்ணா விருது பெற்ற மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற பொதுப்பணி மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் வேலூர் மாவட்ட திமுக சார்பில் ராணிப்பேட்டையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
எம்எல்ஏ ஆர்.காந்தி தலைமை வகித்தார். நிகழச்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், பேரறிஞர் அண்ணா பிறக்காமல் இருந்திருந்தால் இந்த இயக்கத்திலே நாங்கள் இருந்திருக்க முடியாது. பெரியார் பிறக்காமல் இருந்தால் திமுகவே இருந்திருக்காது.
கடந்த 25 ஆண்டுகளாக திமுகவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. விருதுகளை முதல்வர் கருணாநிதி முடிவு செய்து வழங்குவார். நாங்கள் அந்த விருதுகளை எடுத்து தந்துக் கொண்டிருப்போம்.
ஆனால் அண்ணா நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி, நான் உள்பட 4 பேருக்கு விருதுகள் கிடைத்துள்ளது. நாங்கள் இந்த இயக்கத்திலே இதுநாள் வரை பணியாற்றியதன் முழு பயனை இப்போதுதான் அடைந்துள்ளோம்.
மின் வெட்டு காரணமாக நான் மீண்டும் வெட்கப்படுகிறேன். திமுக அரசு அடித்தள, ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. ஒரு வேளை எதிர்காலத்தில் திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டால் அதற்கு மின்வெட்டு காரணமாக இருந்துவிடுமோ என்ற அச்சத்தில் இரவில் தூக்கமே வரமறுக்கிறது என்றார்.