இந்திய, வெளிநாட்டு வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கு ஆபத்தில்லை: அலுவாலியா
இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அலுவாலியா அளித்துள்ள பேட்டியில், இந்திய வங்கிகளில் முதலீடுகள் மிக பலமாக உள்ளன. எனவே எந்த இந்திய வங்கியும் திவாலாகாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உலக அளவில் நிலவும் சீர்குலைவு இந்தியாவுக்கு வராது என்று தாராளமாக நம்பலாம்.
அதேபோல வெளிநாட்டு வங்கிகளின் இந்தியக் கிளைகளும் கூட நல்ல நிலையில்தான் உள்ளன. அவை இங்கு நல்ல முறையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டு வங்கிகளுக்கு இந்தியாவில் சீர்குலைவு ஏற்படாது என நம்புகிறோம். இந்திய வங்கிகளில் கடைப்பிடிக்கப்படும் அதே வழிமுறைகள்தான் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிக்கிளைகளிலும் பின்பற்றப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இந்திய நிதித்துறை கட்டமைப்பு மிக மிக உறுதியானது. எனவே உலக அளவில் நிதித்துறையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் இந்தியாவுக்கு வராது என்று உறுதியாக நம்புகிறோம் என்றார் அலுவாலியா.