ஈழம்: மத்திய அரசைக் கண்டித்து மறியல் - வைகோ கைது
சென்னை: இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படுதவைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவியை அளிப்பதைக் கண்டித்தும் மதிமுக சார்பில் இன்று சென்னையில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை இனப் படுகொலையை கண்டித்தும், இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து ஆகியவற்றை வழங்கிட மத்திய அரசின் அனுமதி வேண்டியும் மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது.
அறிவித்தபடி இன்று காலை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் வைகோ தொண்டர்களிடையே பேசினார்.
அப்போது வைகோ கூறுகையில், மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும்படி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதில் இந்தியா வழங்கிய ராடார் கருவிகளை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதற்கு பிரதமர் அளித்த பதில் கடிதத்தில் தமிழர்களுக்கு எதிராக ராடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தொடர்ந்து இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
அங்குள்ள தமிழர்களுக்கு மருந்து பொருட்கள், உணவு ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம். ஆனால் 18 மாதங்களாகியும் இதுவரை அனுமதி தரப்படவில்லை.
இதனை தடுத்து நிறுத்தியதில் முக்கிய காரணம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தான். இதனை அறுதியிட்டு குற்றஞ்சாட்டுவேன். ஈழத் தமிழர் படுகொலைக்கு முக்கிய காரணம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் தான்.
கருணாநிதியின் ஜெகஜ்ஜால அறிக்கை:
ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக தந்தி கொடுக்கும்படி முதலமைச்சர் கருணாநிதி அவருக்கே உரித்தான ஜெகஜ்ஜால பாணியில் அறிக்கை விடுகிறார். கேட்ட இலாகாவை கொடுக்காவிட்டால் மந்திரி பதவி ஏற்க மாட்டோமென்று மிரட்டல் விடுத்த அவருக்கு மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று மிரட்டாதது ஏன்?
அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவோம் என்ற நாடகத்திற்கு நாங்கள் இடம் தரமாட்டோம் என்றார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் முத்துச்சாமி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இலங்கை எம்.பி. சிவாஜி லிங்கம் ஆகியோரும் கூட்டத்தில் பேசினர்.
இதையடுத்து வைகோ தொண்டர்களுடன் சாஸ்திரி பவன் நோக்கி ஊர்வலமாக கிளம்பினார். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.











Click it and Unblock the Notifications