ரூர்கேலாவில் குண்டுவெடிப்பு - 8 பேர் படுகாயம் - 2 பேருக்கு வலைவீச்சு
ரூர்கேலா: ரூர்கேலாவில் நேற்று அடையாளம் தெரியாத இரு நபர்கள் வீசி விட்டுச் சென்ற குண்டுவெடித்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்று நவராத்திரி விழாவின் இறுதி நிகழ்ச்சியான துர்க்கை அம்மனை ஆஙற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜாமன்கேரா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியை முடித்த விட்டு ஏராளமானோர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பாலத்தின் மீது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த சாஹு என்பவர், யார் நீங்கள், கையில் உள்ள பையில் என்ன உள்ளது என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் பதிலேதும் சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தனர். பின்னர் வேகமாக கிளம்பினர். அப்போது பின்னால் உட்கார்ந்து சென்ற நபர் தான் வைத்திருந்த பையை கூட்டத்தினர் மீது வீசினார்.
அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் சாஹு உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
குண்டை வீசி விட்டுச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.