அரசியல் நீரோட்டத்தில் கலக்க புலிகளுக்கு ராஜபக்ஷே அழைப்பு
இலங்கை அதிபர் மாளிகையில் அனைத்து கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிபர் ராஜபக்ஷே பேசுகையில், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று மீண்டும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் கலக்க வேண்டும். தமிழ் சகோதரர்களுக்கும் ஜனநாயக அரசியல் உரிமைகளை நிலை நாட்டுவதே எங்களுடைய நோக்கமாகும்.
அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவதற்கான முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். இது கடினமானதாக இருந்தாலும் அவசியம். அரசியல் கேள்விகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு.
மக்கள் தங்கள் நோக்கங்களும் ஆசைகளும் நிறைவேறுவதற்காக எனது அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். வட பகுதியில் வாழும் தமிழர்களும் நாட்டின் மற்ற மக்கள் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை பெறுவதை உறுதி செய்வது எங்களது கடமையாகும்.
நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை அரியணையில் அமர்த்துவதற்கு ராணுவ நடவடிக்கைகள் அவசியம் என்றார்.
இந்த சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கருணாவும் கலந்துகொண்டதாக அதிபர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வட பகுதியில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 24 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.