காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை-மேட்டூரிலிருந்து நீர் குறைப்பு
மேட்டூர்: தஞ்சை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வந்த நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
ஆனால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்ததாலும் திறந்துவிடப்படும் நீரின் அளவு 3 நாட்களுக்கு முன் வினாடிக்கு 18,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இந் நிலையில் தற்போது பாசன பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.14 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக 6,000 கன அடி நீரும் கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி நீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications