இலங்கை: இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் தேவை-ராமதாஸ்
சென்னை: இலங்கையுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமகவும் இலங்கை தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ் காந்தி முயற்சித்தார். ஆனால் அவருக்கு சரியான ஆலோசனை சொல்லப்படவில்லை. இதனால் அவரை இழந்தோம்.
இந்தியாவில் மற்ற மாநிலத்தினர் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்கள் வெகுண்டு எழுந்து விடுவார்கள். ஆனால் ஒரு இனமே இலங்கையில் பாதிக்கப்படும் போது நாம் தூங்கிக்கொண்டு இருக்கிறோம்.
ஈழத் தமிழனுக்கும், நமக்கும் இருப்பது தொப்புள்கொடி உறவு. அதனால் நாம் இந்த பிரச்சினையில் சும்மா இருக்க முடியாது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதை அதிமுக, மதிமுக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்து உள்ளார்கள். அவர்களும் கூட்டத்திற்கு சென்றிருக்க வேண்டும். அங்கு போய் குறைகளைக் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்ட முடிவை பாமக ஆதரிக்கிறது. இனியாவது ஒன்றாக குரல் கொடுப்போம். இலங்கை பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்னும் ஒரு மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இலங்கையில் என்ன அரசியல் தீர்வு எடுக்கப்பட்டது என கேட்க வேண்டும்.
இலங்கையுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்றார்.