கனிமொழி ராஜினாமா: மோசடி நாடகம்-ஜெயலலிதா
சென்னை: உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டு போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு விவகாரங்களில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது.
இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதும், அப்பாவி இலங்கை தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் தற்போதுள்ள முக்கியமான பிரச்சனை.
இதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முதல்வர் கருணாநிதி எடுப்பதாக தெரியவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசுக்கு 2 வார காலம் அவகாசம் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.
எம்பி பதவிக்காலம் இன்னும் 6 மாதத்தில் முடிய உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தால் தற்போதுள்ள எம்பிக்களின் பதவிக்காலம் 3 அல்லது 4 மாதங்களிலேயே முடிந்துவிடும்.
ஆனால் எம்பிக்கள் பதவி விலகுவார்கள் என்று தீர்மானத்தி்ல தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மத்திய அமைச்சர்கள் பற்றி அதில் ஒரு வார்த்தைக் கூட இல்லை.
ஒருவேளை தமிழக எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தாலும் திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யமாட்டார்கள். பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள்.
பிற கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில் திமுக மத்திய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டாலும் பொது தேர்தலுக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்கள்தான் இருக்கின்றன. எனவே மாற்று ஏற்பாடு செய்ய முடியாது.
உண்மையிலேயே இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
மேலும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும் அனைத்து தமிழக எம்பிக்களும் திரும்ப பெற வேண்டும்.
மோசடி நாடகம்:
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக கனிமொழி தனது எம்பி பதவி ராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது கனிமொழிக்கு அக்கறை இருந்தால் மாநிலங்களவை தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு அளித்திருக்க வேண்டும்.
ஆனால், தன் தந்தையிடம் பின் தேதியிட்டு அவர் கொடுத்துள்ளார். கனிமொழியின் ராஜினாமாவுக்கு அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக் கூட கிடைக்காது. இது வடிகட்டிய மோசடி நாடகம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.