7 அமைச்சர்கள் உள்பட 14 லோக்சபா திமுக எம்பிக்களும் ராஜினாமா

இலங்கை தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு 2 வாரத்துக்குள் தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வர் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கெடுவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கெடு வரும் 29ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் 29ம் தேதியிட்டு தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார் கனிமொழி.
அவரைத் தொடர்ந்து திமுக ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் நேற்று முன் தினம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வர் கருணாநிதியிடம் கடிதங்கள் அளித்தனர்.
இந் நிலையில் நேற்று லோக்சபா எம்பிக்கள் 14 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வரிடம் கடிதம் அளித்தனர்.
நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி, நிதியைமச்சர் அன்பழகன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு ராஜினாமாக் கடிதங்கள் தரப்பட்டன.
இரவு சுமார் 9 மணியளவில் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் வரிசையில் நின்று ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தனது ராஜினாமா கடிதத்தை முதலில் கொடுத்தார். அந்தக் கடிதம் 29.10.08 என்ற பின் தேதியிட்டு இருந்தது.
அதே தேதியிட்ட கடிதங்களை மத்திய அமைச்சர்கள் ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், வெங்கடபதி, ரகுபதி, ராதிகா செல்வி, பழனி மாணிக்கம் ஆகிய 7 பேரும் கொடுத்தனர்.
பின்னர் திமுக எம்பிக்கள் செ.குப்புசாமி, கிருஷ்ணசாமி, கே.சி.பழனிச்சாமி, ஏ.கே.எஸ்.விஜயன், பவானி ராஜேந்திரன், சுகவனம் ஆகியோர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.
கருணாநிதி பேட்டி:
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளும், எம்.பிக்களும் தாமாகவே முன்வந்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள கடிதங்கள் என்னிடம்தான் உள்ளன.
வேணுகோபால் எம்.பி. தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பதற்காக வந்து கொண்டு இருக்கிறார் . நாளை (இன்று) அவர் அந்தக் கடிதத்தைத் தருவார். (இவரைச் சேர்த்து தான் 14 எம்பிக்கள்)
தயாநிதி மாறன், காதர் முகைதீன் ஆகியோர் ராஜினாமா கடிதம் தரவில்லை.
மத்திய அரசுக்கு கெடுவாக கொடுக்கப்பட்ட நாள் வரை இவர்கள் அனைவரும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வார்கள். ராஜினாமா கடிதம் அங்கு கொடுக்கப்பட்டால், எம்பி பதவி மட்டுமல்ல மந்திரி பதவியும் போய் விடும் என்றுதான் அர்த்தம் என்றார் கருணாநிதி.
மக்களவையில் திமுகவுக்கு தயாநிதி மாறன் உள்பட 15 எம்பி்க்களும் மாநிலங்களவையில் 4 எம்பிக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. (காதர் மொய்தீன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் உதயசூரியன் சின்னத்தில் வென்றதால் அதிகாரப்பூர்வமாக திமுக எம்பி என்றே அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது)
29ம் தேதி வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் இந்தக் கடிதங்களை முதல்வர் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கும், மாநிலங்களவை துணைத் தலைவருக்கும் அனுப்புவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications