7 கட்டங்களாக நடக்கிறது காஷ்மீர் சட்டசபை தேர்தல்
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. நவம்பர் மாதம் 17ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை இத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் தேர்தல் பார்வையாளர்களாக எந்த அரசியல் கட்சிப் பிரமுகர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்ததால் கடந்த ஜூலை மாதம் ஆட்சியை இழந்தது. இதை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஜனவரி மாதம் 10ம் தேதிக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவியேற்க வேண்டும். அம் மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
சில தினங்களுக்கு முன், ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, காஷ்மீர் மாநில தேர்தல் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை, விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.
நவம்பர் மாதம் 17, 23, 30 மற்றும் டிசம்பர் மாதம் 7, 13, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். வாக்குகள் டிசம்பர் 28-ம் தேதி எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி இன்று அறிவித்துள்ளார்.
தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பூத் ஏஜென்டுகள், தேர்கதல் பார்வையாளர்கள் என எந்த நிலையிலும் அரசியல் கட்சிப் பிரமுகர்களை அனுமதிப்பதில்லை என்றும்ஆணையம் முடிவு செய்துள்ளது.
காஷ்மீர் தேர்தல் பணிகளுக்காக பீஹார் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் உருது பேசும் 4,000 பணியாளர்களை அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளன.
காஷ்மீர் மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து அம்மாநிலத்தில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் கோபால்சாமி கூறினார்.