கடும் மழை: சாத்தூரில் வீடு இடிந்து 4 பேர் பலி
விருதுநகர்: சாத்தூரில் பலத்த மழைக்கு வீடு இடிந்து தாய் மகள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், கூலித் தொழிலாளர். இவரது மனைவி அனுசுயா. இவர்களது மகள்கள் பாரதி, சித்ரா.
ஆரோக்கியராஜின் வீட்டுக்கு நேற்று உறவினர்கள் வந்திருந்தனர். இதனால் படுப்பதற்கு போதிய இடம் இல்லை என்று அருகில் உள்ள தனது சகோதரி டெய்சிராணி வீட்டுக்கு சென்றார் உறவினர்களை அழைத்துச் சென்றார் ஆரோக்கியராஜ்.
உறவினர்களோடு ஆரோக்கியராஜ் அங்கு படுத்துத் தூங்கினார். டெய்சிராணி ஆரோக்கியராஜ் வீட்டுக்கு வந்துவிட்டார். டெய்சிராணி, அனுசுயா, பாரதி, சித்ரா, மரியம்மாள் உள்பட சில பெண்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கடந்த சில தினங்களாக பெய்த மழையில் வீட்டின் சுவர்கள் ஊறிபோய் இருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டு சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர்.
சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்கப் போராடினர். ஆனால் அதற்கு டெய்சிராணி, அனுசுயா, பாரதி, மரியம்மாள் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அமைச்சர் ஆறுதல்:
இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பலியானோரின் இறுதி சடங்குக்காக தனது சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.5000 வழங்கினார் அமைச்சர். அரசு நிவாரணம் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.