விவசாய-கல்வி கடன்களுக்கு முக்கியத்துவம்:இந்தியன் வங்கி
சென்னை: விவசாயம் மற்றும் கல்வி சார்ந்த கடன்களுக்கு இந்தியன் வங்கி தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியன் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.சுந்தரராஜன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.
கூட்ட முடிவில் எம்.எஸ்.சுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியன் வங்கி கடந்த ஆண்டில் இந்த காலகட்டத்தில் செய்ததைவிட கூடுதல் வர்த்தகம் செய்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் முடிவடைந்த கணக்குப்படி ஆபரேட்டிங் லாபமாக 532 கோடியே 80 லட்சம் ரூபாய் வந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தைவிட 55.14 சதவீதம் அதிகம். நிகர லாபம் 282 கோடியே 93 லட்சம் ரூபாய்.
கல்வி கடன் வழங்குவதில் இந்தியன் வங்கி கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 653 மாணவர்களுக்கு ஆயிரத்து 468 கோடியே 96 லட்சம் ரூபாய் கல்வி கடனாக வழங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் 39 ஆயிரத்து 277 மாணவர்களுக்கு 312 கோடியே 36 லட்சம் ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுயஉதவி குழுக்களுக்கு இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வரையில் 36 ஆயிரத்து 859 சுய உதவி குழுக்களுக்கு 472 கோடியே 85 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.
விவசாய கடனுக்கு தொடர்ந்து முன்னுரிமை தரப்படுகிறது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு கடனாக 7 ஆயிரத்து 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிக்கு பின் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இது வரையில் 38 ஆயிரத்து 791 விவசாயிகளுக்கு 112 கோடியே 74 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 6 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக 32 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன, என்றார் சுந்தர்ராஜன்.