ஒரு வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறையும்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வந்ததால், பெட்ரோல், டீசல், காஸ் விலை வெகுவாக உயர்த்தப்பட்டது.
ஆனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்த போதிலும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் மத்திய அரசு மெளனம் காத்து வந்தது.
தற்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 66 டாலராக குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது 145 டாலராக இருந்தது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருவதை சுட்டிக்காட்டி மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, அரசின் பதிலை உறுப்பினர்கள் கோரினார்கள்.
இதற்கு பதிலளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவு அறிவிப்பு ஒரு வார காலத்துக்கு வெளியிடப்படும். நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம். ஒரு வார காலத்தில் இதுபற்றி அறிவிப்பு வெளியாகும்.
கச்சா எண்ணெய் விலை மேலும் குறைவதற்காக அரசு காத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படும் போது இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
அமைச்சரின் பதிலை கேட்ட உறுப்பினர்கள் அதிப்தியுடன் இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதற்கு தியோரா, விமான நிறுவனங்களுக்கு எந்த சலுகையையும் தனது அமைச்சகம் அளிக்கவில்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இருப்பினும் தியோராவின் பதிலில் திருப்தி இல்ைல என்று கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
விமான நிறுவனங்களுக்கு இழப்பீடு இல்லை:
இதற்கிடையே, தனியார் விமான நிறுவனங்களுக்கு இழப்பீடு எதையும் மத்திய அரசு தராது என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் பேசுகையில், எனது அமைச்சகமோ அல்லது பெட்ரோலியத் துறையோ, தனியார் விமான நிறுவனங்களுக்கு எந்தவிதமான இழப்பீட்டையும் தராது. தரவும் இல்லை.
விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை காலத்தை 60 நாட்களிலிருந்து 90 நாட்களாக அதிகரித்துள்ளோம், அவ்வளவுதான். இதன் மூலம் தங்களது நஷ்டத்தை அவர்கள் சமாளித்துக் கொள்ள முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications